Thursday, October 5, 2017

விண்ணப்பம்

இரவு துளைந்த
பார்வை வட்டத்துள்
ஒளி கடந்த இருள்
அதில் மினு மினுத்த
சாலை விளக்குகள் ...
விர்ரென கடந்து சென்ற
வேக வீதி வாகனங்கள்
சிகப்பு மஞ்சள் பச்சை என
அணைந்தொளிரும்
சாலை விதி விளக்குகள்
எதுவும் படர்வதாய் இல்லை ...

வீசும் பொழுதில் தெரியாத
வார்த்தையின் வீரியம்
நீ விலகும் கணங்களில்
தெரிந்துவிடுகிறது ...

சில ஏமாற்றங்களின்
சிதிலமடைந்த
துகள்கள் கொண்டு
இயங்கும் இருதய அறைகள்
இன்னும் உன் நினைவுகளை
இழுத்து நிறைத்துக் கொள்கிறது
கரங்களில் வராத உன்னை
கனவுகளில் படர்ந்துகொள்ள ...

மன்னிப்பு எனும்
வார்த்தையை கடந்து
மண்டியிடுகிறேன்
இறைவன்
படைத்த படைப்புகளில்
அதிர்ஷ்டம் தொலைத்தவள்
அனுசரிக்க தெரியாதவள்
கண்ணீரோடு விண்ணப்பம்
எனை கடந்துவிடு ..

கண்ணீர் கொண்டு
கனவுகளை துடைத்து விடுகிறேன் .

No comments:

Post a Comment